ஓட்டல் அதிபர் கொலை வழக்கு; சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவு

ஓட்டல் அதிபர் கொலை வழக்கில் சோட்டா ராஜனை குற்றவாளி என மும்பை கோர்ட்டின் சிறப்பு நீதிபதி ஏ.எம். பாட்டீல் தீர்ப்பு அளித்துள்ளார்.
ஓட்டல் அதிபர் கொலை வழக்கு; சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவு
Published on

புனே,

மும்பையின் மத்திய பகுதியில் கம்தேவி என்ற இடத்தில் கோல்டன் கிரவுன் என்ற ஓட்டல் உள்ளது. இதன் உரிமையாளராக இருந்தவர் ஜெயஷெட்டி. இந்நிலையில், நிழலுலக தாதாவான சோட்டா ராஜன் என்பவரிடம் இருந்து அவருக்கு தொலைபேசி வழியே மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன.

இதுபற்றி புகார் அளித்ததும், மராட்டிய போலீசார் அவருக்கு பாதுகாப்பு வழங்கினர். எனினும், அவருக்கு வழங்கிய பாதுகாப்பை போலீசார் வாபஸ் பெற்ற 2 மாதங்களில், 2001-ம் ஆண்டு மே 4-ந்தேதி அவர் சுட்டு கொல்லப்பட்டார்.

ஓட்டலின் உள்ளே திடீரென புகுந்த 2 மர்ம நபர்கள் அவரை சுட்டு விட்டு தப்பினர். எனினும், ஓட்டல் மேலாளர் மற்றும் ஊழியர் ஒருவர் என இரண்டு பேர் அவர்களை துரத்தி சென்றனர். இதில், அவர்களில் ஒருவர் பிடிபட்டார்.

இந்த வழக்கு, மும்பை கோர்ட்டு ஒன்றில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் சிறப்பு நீதிபதி ஏ.எம். பாட்டீல் சோட்டா ராஜனை குற்றவாளி என தீர்ப்பு அளித்துள்ளார். அவருக்குரிய தண்டனை விவரம் இன்று பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.  இந்நிலையில், ஓட்டல் அதிபர் கொலை வழக்கில் சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.  இந்த வழக்கில் 23 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

இந்தோனேசியாவில் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்ட சோட்டா ராஜன், பின்னர், இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அவர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com