பெங்களூரு டாக்டருக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவியது எப்படி? - புதிய தகவல்

பெங்களூரு டாக்டருக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவியது எப்படி என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு டாக்டருக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவியது எப்படி? - புதிய தகவல்
Published on

பெங்களூரு,

பெங்களூருவில் 2 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அதில் ஒருவர் பெங்களூருவில் அரசு ஆஸ்பத்திரி ஒன்றில் டாக்டராக பணியாற்றி வருகிறார். அவருக்கு ஒமைக்ரான் வைரஸ் தாக்குதல் பரவியது எப்படி? என்பது பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது அந்த டாக்டர், கடந்த நவம்பர் மாதம் 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை பெங்களூருவில் நடைபெற்ற டாக்டர்களின் மாநாட்டில் கலந்து கொண்டார். அதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த டாக்டர்களும் கலந்து கொண்டனர். அவர் மாநாட்டின் கடைசி நாளில் தான் பங்கேற்றார். அதற்கு அடுத்த நாளே அவருக்கு நோய் அறிகுறிகள் தென்பட தொடங்கியது. உடனடியாக அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டது உறுதியானது.

அந்த மாநாட்டில் இருந்து தான் அவருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று சுகாதாரத்துறையினர் கூறுகிறார்கள். ஆனால் உடலில் வைரஸ் நுழைந்த மறுநாளே அறிகுறிகள் தென்பட தொடங்குமா? என்ற கேள்வி எழுகிறது. அதாவது வைரஸ் உடலுக்குள் புகுந்து குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு பிறகே அறிகுறிகள் தெரிய தொடங்கும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். அதனால் அவருக்கு எந்த வழியில் ஒமைக்ரான் வந்தது என்பதை உறுதி செய்வதில் சுகாதாரத்துறையினரே குழம்பி போய் உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com