உத்தர பிரதேசம் : முத்தலாக் வழங்கப்பட்ட பெண் உயிரோடு எரித்து கொலை

உத்தர பிரதேசத்தில் முத்தலாக்கிற்கு எதிராக புகார் அளிக்க முயன்ற பெண்ணை அவரது கணவரும் குடும்பத்தாரும் சேர்ந்து உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் : முத்தலாக் வழங்கப்பட்ட பெண் உயிரோடு எரித்து கொலை
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் சிராவஸ்டி மாவட்டத்தில் உள்ள காத்ரா என்ற கிராமத்தில் வசித்து வரும் நஃபீஸ் என்ற நபருக்கு எதிராக அவரது மனைவி சயீதா, பிங்காபுர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மும்பையில் வேலை செய்து வரும் அவரது கணவர் நஃபீஸ், கடந்த ஆகஸ்டு 6 ஆம் தேதி தொலைபேசி மூலமாக தனக்கு முத்தலாக் வழங்கியதாக தெரிவித்திருந்தார்.

சயீதா அளித்த புகாரை பதிவு செய்யாமல், அவரது கணவர் மும்பையில் இருந்து திரும்பி வரும் வரை காத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி நஃபீஸ் ஊருக்கு திரும்பி வந்ததும் அவரையும், அவரது மனைவியையும் அழைத்து சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

பின்னர் வீடு திரும்பியதும் நஃபீஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சயீதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று, சயீதாவிடம் முத்தலாக் வழங்கிவிட்டதால் வீட்டை விட்டு வெளியேறுமாறு நஃபீஸ் சண்டையிட்டுள்ளார். அதன் பின் நஃபீஸ் தனது குடும்பத்தினரோடு சேர்ந்து தனது ஐந்து வயது மகளின் கண்முன்னே தனது மனைவி சயீதாவை உயிரோடு எரித்து கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சயீதாவின் தந்தை ரம்ஸான் அலி கான் கூறுகையில், தனது மகளை அவர்கள் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும் தலாக் வழங்கியதற்கு எதிராக புகார் அளிக்க முயன்றதால் தனது மகளை கொலை செய்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவத்தில் நஃபீஸ் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் விரைவில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சயீதா அளித்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காத போலீசாரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com