

ஐதராபாத்,
விமான பயணத்திற்கு முன்பாக, பயணிகள் பல இடங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக, முகத்தை அடையாளம் காணும் தொழில் நுட்பத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அடிக்கடி விமான பயணம் மேற்கொள்பவர்கள், இந்த டிஜிட்டல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த திட்டத்தை பயணிகள் பயன்படுத்துவதற்கான முகாம், ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் (ஜூலை) நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் சிரஞ்சீவி, நடிகர் நாகார்ஜுனா மற்றும் அவருடைய மகன் அகில் உள்பட 4 ஆயிரம் பேர் தாங்களாகவே முன்வந்து இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த முகாமில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விண்ணப்பத்தாரர்களின் அடையாள சான்றிதழ் மற்றும் விவரங்களை பரிசோதித்து பதிவு செய்து கொண்டனர்.