நான் பாதுகாப்பாக இல்லை; ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மற்றொரு ராகிங் புகார்

இதனால் படிப்பை தொடர்வது சாத்தியமில்லை என்றும் வேறு விடுதிக்கு மாற்றும்படியும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நான் பாதுகாப்பாக இல்லை; ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மற்றொரு ராகிங் புகார்
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் புதிதாக சேர்ந்த மாணவர் ஒருவர் கடந்த ஆகஸ்டில் ராகிங்குக்கு ஆளானார். மூத்த மாணவர்கள் சிலர், தங்கும் விடுதியில் அவரிடம் ராகிங்கில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ராகிங்கின்போது கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி விடுதியின் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார். அடுத்த நாள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்த சம்பவத்தில், 6 இளநிலை மாணவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் முதுநிலை மாணவர்கள் மற்றும் பிஎச்.டி. மாணவர் ஒருவரும் அடங்குவர்.

இதன்பின் பல்கலைக்கழகத்தில் ராகிங் ஒழிப்பு கமிட்டி உருவாக்கப்பட்டு, ராகிங்கை ஒழிப்பதற்கான விசயங்கள் பற்றி பரிந்துரைக்கப்பட்டன.

இதன்பின், 6 மாணவர்களும் பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கு காலவரையின்றி தடை விதிப்பது என முடிவானது. இவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், ஆடவர் விடுதியில் உள்ள சில மாணவர்களுக்கு எதிராக முதுநிலை மாணவர் ஒருவர் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளார். இது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கலை துறை மாணவரான அவர் இதுபற்றி டீனுக்கு மெயில் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அதில், பல்வேறு மனதளவிலான சித்ரவதை மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொண்டேன். இதனால், பாதுகாப்பாக நான் உணரவில்லை. சிலர் எனக்கு எதிராக செயல்படுகின்றனர். இதனால் படிப்பை தொடர்வது சாத்தியமில்லை என தெரிவித்து உள்ளார். அதனால், வேறு விடுதிக்கு மாற்றும்படி கோரிக்கையும் விடுத்துள்ளார். இந்த விவகாரம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது என துணை வேந்தர் புத்ததேவ் சாவ் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com