சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறாதவர்களின் ஏமாற்றங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது; பிரதமர் மோடி

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற முடியாதவர்களின் ஏமாற்றங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்து உள்ளார்.
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறாதவர்களின் ஏமாற்றங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது; பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

ஆண்டுதோறும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.), ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற பணியிடங்களுக்கும், குரூப்-ஏ, குரூப்-பி பிரிவில் உள்ள பிற பணியிடங்களையும் நிரப்புவதற்கு போட்டித்தேர்வை நடத்துகிறது.

முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முக தேர்வு என 3 நிலைகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதன் இறுதி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வில் மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அவர்களில் 613 பேர் ஆண்கள் மற்றும் 320 பேர் பெண்கள் ஆவர். முதல் 4 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர். முதல் 25 இடங்களில் 14 பெண்கள் மற்றும் 11 ஆண்கள் உள்ளனர்.

சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவு வெளியான நிலையில், அவர்களுக்கான தனது வாழ்த்து செய்திகளை பிரதமர் மோடி டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார்.

அவர் வெளியிட்ட செய்தியில், சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பலனுள்ள மற்றும் திருப்திகர பணி கிடைப்பதற்கு எனது வாழ்த்துகள்.

நாட்டுக்கு சேவையாற்றுவதுடன், மக்களின் வாழ்வில் நேர்மறை மாற்றங்களையும் கொண்டு வருவது என்பது மிக ஆச்சரியமூட்டும் தருணம் என தெரிவித்து உள்ளார்.

இந்த தேர்வில் வெற்றி பெற முடியாதவர்களின் ஏமாற்றங்களையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இன்னும் நிறைய முயற்சிகள் கிடைக்கப்பெற உள்ளது என்பது மட்டுமின்றி, உங்களது திறமைகள் மற்றும் வலிமைகளை வெளிப்படுத்த இந்தியாவில் பல்வேறு பன்முக வாய்ப்புகள் உள்ளன என்று தேர்ச்சி அடையாதவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com