

லக்னோ,
உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த மாநிலத்தில் கொரோனாவுக்கு 36 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 1,677 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் ஊரடங்கு நடவடிக்கைளையும் எடுத்து வருகிறது.
இந்நிலையில் மாநிலத்தின் தொழிற்கல்வித்துறை மந்திரியாகவும், கேபினெட்டில் அங்கம் வகித்த கமல் ராணி வருண் கடந்த மாதம் 18-ம் தேதி கொரோனாவில் பாதிக்கப்பட்டார். அவர் லக்னோவில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிவந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியதாவது:- கேபினெட் மந்திரி கமல் ராணி வருண் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை அவரின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கிறேன்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பிஜிஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் கமல் ராணி. மக்கள் மத்தியில் புகழ்பெற்ற தலைவராகவும், சமூக சீர்திருத்த தலைவராகவும் ராணி திகழ்ந்தார். மந்திரியாக பொறுப்பேற்று மிகவும் திறமையாகச் செயல்பட்டவர் கமல் ராணி எனத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியான முதல் எம்எல்ஏ கமல் ராணி வருண் என்பது குறிப்பிடத்தக்கது.