ஜனநாயகம் காப்பாற்றப்பட என்னை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறேன்; யஷ்வந்த் சின்கா

ஜனநாயகம் காப்பாற்றப்பட என்னை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறேன் என்று ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார்.
ஜனநாயகம் காப்பாற்றப்பட என்னை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறேன்; யஷ்வந்த் சின்கா
Published on

புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடையும் சூழலில், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. வேட்பாளராக திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டு உள்ளார்.

எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். இதனையடுத்து இருவரும் மாநிலம்தோறும் சென்று ஆதரவு திரட்டினர்.

இந்த தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு உள்ள முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா செய்தியாளர்களிடம் பேசும்போது, நான் அரசியல் போராட்டம் மட்டுமே செய்யவில்லை. அரசு கழகத்திற்கு எதிராகவும் கூட போராடி வருகிறேன்.

அவர்கள் அதிக சக்தி வாய்ந்தவர்கள் ஆகிவிட்டனர். கட்சிகளை அவர்கள் உடைக்கிறார்கள். மக்களை அவர்களுக்கு வாக்களிக்க கட்டாயப்படுத்துகிறார்கள். இதில், பணம் விளையாடுவதும் கூட நடக்கிறது. நாட்டின் ஜனநாயகத்திற்கான (அது இருக்குமோ அல்லது முடிவுக்கு வருமோ) பாதை அமைவதில், இந்த தேர்தல் மிக முக்கியம்.

அனைத்து வாக்காளர்களும் தங்களது மனதில் இருந்து இதனை கேட்க வேண்டும் என நான் கேட்டு கொள்கிறேன். இது ரகசிய வாக்கெடுப்பு. அதனை பயன்படுத்தி, ஜனநாயகம் காப்பாற்றப்பட என்னை தேர்ந்தெடுப்பார்கள் என நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com