என் உயிரில் பாதியாக இருந்த உன்னை கொன்று விட்டேனே.. மனைவியை கொன்று ஸ்டேட்டஸ் வைத்த கார் டிரைவர்

ஆஞ்சநேயுலு கார் டிரைவர் வேலையை விட்டு விட்டு ஊதாரித்தனமாக ஊர் சுற்றி திரிந்ததால் மேலும் நிதி நெருக்கடி அதிகரித்தது.
என் உயிரில் பாதியாக இருந்த உன்னை கொன்று விட்டேனே.. மனைவியை கொன்று ஸ்டேட்டஸ் வைத்த கார் டிரைவர்
Published on

திருப்பதி,

தெலுங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டம், சித்த குண்டாவை சேர்ந்தவர் ஆஞ்சநேயுலு. கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சரஸ்வதி (வயது 34). தம்பதிக்கு 12 வயதில் மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர்.

சரஸ்வதி ஹைடெக் சிட்டி ப்குதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வீட்டு பராமரிப்பு மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவர்களது குடும்பத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டது. மேலும் ஆஞ்சநேயுலு மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்தார். ஆஞ்சநேயுலு கார் டிரைவர் வேலையை விட்டு விட்டு ஊதாரித்தனமாக ஊர் சுற்றி திரிந்ததால் மேலும் நிதி நெருக்கடி அதிகரித்தது. பண பற்றாக்குறை காரணமாக குழந்தைகளின் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார்.

இதனால் விரக்தி அடைந்த சரஸ்வதி இனி உன்னுடன் வாழ முடியாது என கூறி தனது குழந்தைகளை அழைத்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த 17-ந் தேதி சரஸ்வதியின் தாய் வீட்டிற்கு சென்ற ஆஞ்சநேயுலு தான் திருந்தி விட்டதாகவும், இனி தவறு செய்ய மாட்டேன் என வாக்குறுதி அளித்து மனைவி, குழந்தைகளை மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை வேலைக்குச் சென்ற சரஸ்வதி வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்து குழந்தைகளுக்கு உணவு கொடுத்துவிட்டு படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

வெளியே சென்று இருந்த ஆஞ்சநேயுலு நள்ளிரவு வீட்டிற்கு வந்தார். தூங்கிக் கொண்டு இருந்த மனைவியின் தலையில் பலமுறை கல்லால் தாக்கினார். இதில் சரஸ்வதியின் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சரஸ்வதியின் அருகில் தூங்கிக் கொண்டு இருந்த அவரது குழந்தைகளின் உடைகளும் ரத்தத்தில் நனைந்தது. அப்போது குழந்தைகள் கண்விழித்த போது உங்களது தாய் தூங்கிக் கொண்டு இருக்கிறார்.நீங்களும் தூங்குங்கள் என தெரிவித்து விட்டு வெளியே சென்றார்.

தந்தையின் நடத்தையில் சந்தேகம் அடைந்த குழந்தைகள் விளக்கை போட்டு பார்த்த போது, தாய் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு கதறி துடித்தனர். அருகில் உள்ள தாய் மாமா சுதாகருக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். சுதாகர் சம்பவ இடத்திற்கு வந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மனைவியை கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற ஆஞ்சநேயுலு என் உயிரில் பாதியாக இருந்த உன்னை நான் என் கைகளால் கொன்று விட்டேனே என ஸ்டேட்டஸ் வைத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரஸ்வதியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆஞ்சநேயுலு வை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com