

கொல்கத்தா
மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. 5 கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், எஞ்சிய 3 கட்டத் தேர்தல்களுக்கான பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. நடியா மாவட்டத்திலுள்ள கலிகனி பகுதியில் மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேசும் போது கூறியதாவது:-
நாடு முழுவதும் ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா உள்ளது. கடந்த ஆறு மாதங்களாக கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளாதது ஏன்? இதற்கு பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்.
கொரோனா இரண்டாம் அலை பரவுவதற்கு பிரதமர் மோடியே காரணம். தகுந்த நேரத்தில் உரிய நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொண்டிருந்தால், தற்போது இரண்டாம் முறையாக கொரோனா பரவும் நிலை ஏற்பட்டிருக்காது.
எஞ்சிய 3 கட்ட தேர்தல்களை ஒரே நாளில் அல்லது 2 நாட்களில் நடத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம். பா.ஜ., சொல்வதன் அடிப்படையில் உங்கள் முடிவை எடுக்க வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.