

புதுடெல்லி,
காவிரி விவகாரம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பிரச்சினைகளை மையப்படுத்தி பாராளுமன்றத்தில் அதிமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பாராளுமன்றம் முடங்கி வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்த்குமார் நேற்று பேட்டி அளித்தார். அப்போது, காங்கிரசின் ஜனநாயகமற்ற அரசியல் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நடைபெறவில்லை. அரசு அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசுவதற்கு தயாராக உள்ளது. ஆனால் அவர்கள் அவையை செயல்படவிடாமல் முடக்குகிறார்கள்.
நாடாளுமன்றம் செயல்படாத 23 நாட்களுக்கான சம்பளம் மற்றும் படிகளை பா.ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் வாங்கமாட்டார்கள். அந்த பணம் மக்கள் சேவைக்காக வழங்கப்படும். அதை நாங்கள் செய்யவில்லை என்றால், மக்களின் பணத்தை எடுத்துக்கொள்ள எங்களுக்கு உரிமை இல்லை என்றார்.
பாரதீய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பிக்கள் ஊதியத்தை விட்டுத்தர முடிவு செய்துள்ளதாக அனந்தகுமார் கூறிய நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி இதற்கு எதிர்வினை ஆற்றியிருக்கிறார். ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த சுப்ரமணியன் சுவாமி கூறும்போது, நான் அவைக்கு தினமும் செல்கிறேன். பாராளுமன்றம் செயல்படவில்லையென்றால் அது என்னுடைய தவறு இல்லை. நான் ஜனாதிபதியின் பிரதிநிதி. எனவே, அவர் கூறும்வரை, எனது சம்பளத்தை நான் பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று எவ்வாறு நான் சொல்ல முடியும் என்றார்.