

புதுடெல்லி,
ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்த பெருமையை பெற்றவர் ஷின்ஜோ அபே. சமீப காலங்களாக அவரது உடல்நிலை குறித்து ஊகங்கள் வெளிவந்தன. கடந்த கோடை காலத்தில் அவரது உடல்நிலையில் பாதிப்பு தெரிய தொடங்கியது. எனினும், இந்த மாதம் அவரது உடல்நிலை தீவிர மோசமடைந்தது. ஒரு குறிப்பிடப்படாத ஆரோக்கிய பாதிப்புக்காக மருத்துவ பரிசோதனைகளுக்காக, மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர் சமீபத்திய நாட்களில் காய்ச்சல் அதிகரித்து உள்ளது என கூறப்படுகிறது.
ஷின்ஜோ உடல் நலப்பிரச்சினைகள் தொடர்பாக தனது ராஜினாமாவை வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்க உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்து இருந்தன. தனது நோய் மோசமடைந்து உள்ளதால் நாட்டை வழிநடத்துவதில் அது சிக்கலை ஏற்படுத்தும் என்று அவர் கவலைப்படுகிறார். அதனால் ராஜினாமா செய்ய விரும்புகிறார் என உள்ளூர் ஊடகம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என தகவல் வெளியானது. அவரது பதவி காலம் வரும் 2021ம் ஆண்டு செப்டம்பர் உடன் முடிவடைகிறது. அதனால், புதிய தலைவரை தேர்ந்தெடுத்து அதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறும் வரை அவர் பதவியில் நீடிக்க கூடும் என கூறப்படுகிறது.
ஷின்ஜோ அபேக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், எனது அன்பு நண்பனே, உனக்கு உடல்நலம் பாதிப்பு என கேள்விப்பட்டதும் நான் வேதனை அடைந்தேன். சமீப காலங்களில், உம்முடைய அறிவார்ந்த தலைமைத்துவம் மற்றும் தனிப்பட்ட ஈடுபாடு ஆகியவற்றால் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் நட்புறவு முன்பிருந்ததற்கும் மேலாக ஆழ்ந்த மற்றும் வலிமை உடைய ஒன்றாக மாறியது.
நீங்கள் விரைவில் நலமடைந்து திரும்ப வேண்டும் என விரும்புகிறேன். அதற்காக இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் என கூறியுள்ளார்.