

கோழிக்கோடு,
கொரோனா ஊரடங்கால், வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை, வந்தே பாரத் திட்டத்தின் மூலம், இந்தியா அழைத்து வரும் பணியை மத்திய அரசு செய்து மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், துபாயில் சிக்கி தவித்த இந்தியர்கள் 191 பேர், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம் கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும் போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளாகி பாதியாக உடைந்தது,
ஓடுதளம் அருகே வந்த போது, 35 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானம் இரண்டாக உடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விமானத்தில் இருந்த பலர் காயமடைந்து உள்ளனர் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இதையடுத்து கோழிக்கோடு விமான விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 123 பேர் படுகாயமடைந்துள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில்,
"கோழிக்கோடு விமான விபத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தன் அன்புக்குரியவர்களை இழந்தவர்களை எண்ணி, என் மனம் வருந்துகிறது. மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் களத்தில் அதிகாரிகள் நிற்கிறார்கள் மீட்பு பணிகள் விரைவாக நடக்கின்றன. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குகிறார்கள்.
இவ்வாறு தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.