

மேற்குவங்கத்தின் மால்டா மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் (எஸ்ஐஆர்) போது வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக புகார் எழுந்தது. இது குறித்து ஆய்வு செய்வதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பணியில் அமர்த்தப்பட்ட நீதித்துறை அதிகாரிகள் மால்டா மாவட்டம் கலியாசக் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் சென்றனர்.அங்கு நேற்றுமுன்தினம் குவிந்திருந்த போராட்டக்காரர்கள், வட்டார வளர்ச்சி அலுவலகத்தைச் சூழ்ந்து கொண்டு அங்கிருந்த 3 பெண் அதிகாரிகள் உட்பட 7 அதிகாரிகளை சிறை வைத்தனர். 9 மணி நேரத்துக்குப்பிறகு அங்கு போலீஸார் சென்று, போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி சிறைவைக்கப்பட்ட அதிகாரிகளை நேற்று அதிகாலை 1 மணியளவில் மீட்டனர். இந்த விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்ய காந்த தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி காட்டமாக கூறியதாவது:
ஏப்ரல் 1-ந்தேதி பிற்பகல் 3.30 மணிக்கு 7 நீதிபதிகளையும் ஒரு கும்பல் முற்றுகையிடத் தொடங்கியது. இதுகுறித்து ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் மாநில அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். இரவு 8.30 மணி வரை, மாநில அதிகாரிகள் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.உணவு, தண்ணீர் கொடுக்கவில்லை. பிறகு பதிவாளர் ஜெனரல், மாநில உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரை தொடர்பு கொண்டார். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீதிபதிகளுக்கு உணவு, தண்ணீர் கூட கொடுக்க அனுமதிக்கப்படவில்லை. அதையடுத்து, ஐகோர்ட்டு தலைமை நீதிபதி நேரடியாக தலையிடும் நிலைக்கு தள்ளப்பட்டார். உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோரை அழைத்தார். இருவரும் தலைமை நீதிபதி வீட்டுக்குச் சென்றனர். நள்ளிரவுக்குப் பிறகு, நீதிபதிகள் விடுவிக்கப்பட்டனர்.
நீதிபதிகளின் பாதுகாப்பை தேர்தல் கமிஷன் உறுதி செய்ய வேண்டும். அவர்கள் அருகே 5 பேருக்கு மேல் திரள அனுமதிக்கக்கூடாது. நீதிபதிகள் பணியாற்றும் இடங்களில் போதிய மத்திய படைகளை அமர்த்த வேண்டும். நீதிபதிகளை பிணைக்கைதிகளாக்கி முற்றுகையிட்ட சம்பவம் குறித்த விசாரணையை சி.பி.ஐ. அல்லது என்.ஐ.ஏ.விடம் தேர்தல் கமிஷன் ஒப்படைக்க வேண்டும். இதற்கு உடன்படுவதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்கு வங்காள தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீது ஏன் உரிய நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு அவர்கள் 4 பேரும் விளக்கம் அளிக்க வேண்டும். 6-ந்தேதி விசாரணையின்போது, 4 பேரும் ஆன்லைனில் ஆஜராக வேண்டும்.நீதிபதிகள் மனதில் அச்சத்தை உருவாக்கும் வகையில் யாரும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இது மாநில அரசின் முழுமையான தோல்வியை காட்டுகிறது தேர்தல் கமிஷன் எதிரியாக செயல்படக்கூடாது என்று மேற்கு வங்காள அரசு அட்வகேட் ஜெனரல் கூறினார். அதற்கு தலைமை நீதிபதி, "துரதிருஷ்டவசமாக உங்கள் மாநிலத்தில் ஒவ்வொருவரும் அரசியல் ரீதியாக பேசுகிறீர்கள். எங்களை கருத்து கூற வைக்கிறீர்கள். அந்த சமூக விரோதிகள் யார் என்று எங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறீர்களா? நான் நள்ளிரவு 2 மணி வரை கண்காணித்துக் கொண்டிருந்தேன். மிக மிக துரதிருஷ்டவசமானது" என்று கூறினார்.