

புதுடெல்லி,
அமெரிக்கா - ஈரான் இடையேயான தாக்குதல் சம்பவம் தற்போது அமைதி ஒப்பந்தத்தின் மூலம்முடிவுக்கு வந்துள்ளது. இதனால் ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டுள்ளதால், உலகெங்கிலும் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு சீராகும் நிலை ஏற்பட்டுள்ளது. அமைதி ஒப்பந்தத்துக்கு பல்வேறு நாடுகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் மோதல் போக்கு முடிவுக்கு வருவதை வரவேற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
மேற்கு ஆசிய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வை நான் வரவேற்கிறேன். இந்த மோதல் உலகம் முழுவதும் கடுமையான பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தி, பல நாடுகளில் உயிர் இழப்புகளுக்கும் வழிவகுத்துள்ளது. இந்த அமைதி ஒப்பந்தம், மேற்கு ஆசியாவில் அமைதியைக் கொண்டுவரவும், முக்கிய கடல்வழிப் பாதைகள் வழியாக வர்த்தகம் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்யவும் உதவும் என இந்தியா நம்புகிறது.”
இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.