மக்களுக்கு சேவை செய்ய எனது கடைசி மூச்சு உள்ளவரை போராடுவேன் - முதல்-மந்திரி அசோக் கெலாட்

மக்களுக்கு சேவை செய்ய எனது கடைசி மூச்சு உள்ளவரை போராடுவேன் என்று முதல்-மந்திரி அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு சேவை செய்ய எனது கடைசி மூச்சு உள்ளவரை போராடுவேன் - முதல்-மந்திரி அசோக் கெலாட்
Published on

ஜெய்ப்பூர்,

குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு பின் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 156 தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காக கொண்டுள்ளது. 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க காரணம் நான் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களே ஆவர்.

மாநிலத்தில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக குறை கூறுவதற்கு பாஜகவுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. ராஜஸ்தான் மாநில மக்களும் தற்போது உள்ள அரசின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியாக உள்ளனர். அரசின் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. எங்களது பாதை சரியாக உள்ளது.

1998-ஆம் ஆண்டு காங்கிரஸ் ராஜஸ்தானில் ஆட்சியமைத்தபோது காங்கிரஸுக்கு 156 தொகுதிகள் கிடைத்தன. அப்போது மாநில காங்கிரஸ் குழுவின் தலைவராக நான் இருந்தேன். அதே 156 தொகுதிகள் என்ற திட்டத்துடன் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளோம். நாங்கள் அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளோம். கடந்த 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் குழப்பங்களின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் எனக்கு ஆதரவாக துணை நின்றார்கள்.

மக்களுக்கு சேவை செய்யும் எனது அரசினைக் காப்பாற்ற நான் கடுமையாகப் போராடினேன். மக்களுக்கு சேவை செய்ய எனது கடைசி மூச்சு உள்ளவரை போராடுவேன். மக்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com