பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி- இந்திய விமானப்படை வாழ்த்து

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. அரபிக்கடலில் ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணை, இலக்கை துல்லியமாக தாக்கியது.
பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி- இந்திய விமானப்படை வாழ்த்து
Published on

புதுடெல்லி,

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. அரபிக்கடலில் ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணை, இலக்கை துல்லியமாக தாக்கியது.

இந்திய-ரஷிய கூட்டு நிறுவனமான பிரமோஸ் ஏரோஸ்பேஸ் தயாரித்த சூப்பர்சானிக் குரூஸ் ரக ஏவுகணைதான் பிரமோஸ். இந்த ஏவுகணையை நீர்மூழ்கி கப்பல், கப்பல், விமானம் மற்றும் தரையில் இருந்து ஏவ முடியும்.

இந்த நிலையில், போர்க்கப்பலில் இருந்து ஏவி நேற்று சோதனை நடத்தப்பட்டது. அரபிக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த, முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலில் இருந்து பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை ஏவப்பட்டது அது, இலக்கை துல்லியமாக தாக்கியது.

சோதனை வெற்றிகரமாக நடந்ததை தொடர்ந்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், பிரமோஸ் ஏரோஸ்பேஸ், இந்திய கடற்படை ஆகியவற்றுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்தார். இதுபோல், சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் சதீஷ்ரெட்டி பாராட்டு தெரிவித்தார். இதன் மூலம், இந்திய ஆயுத படைகளின் திறன் பல வழிகளில் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

பிரமோஸ் ஏவுகணை கடந்த மாதம் 30-ந் தேதி தரையில் இருந்தும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் போர் விமானத்தில் இருந்தும் ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. நிலமார்க்கத்தில் அதன் தாக்குதல் திறன், 290 கி.மீட்டரில் இருந்து 400 கி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com