

ஸ்ரீநகர்,
காஷ்மீரில் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த மாதம் பாரதீய ஜனதா விலக்கி கொண்டது. இதனால் மெகபூபா ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மக்கள் ஜனநாயக கட்சியில் அதிருப்தியில் உள்ள சில எம்.எல்.ஏக்கள், பாஜகவுடன் கைகோர்த்து புதிய கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஜம்மு காஷ்மீர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை இந்த விவகாரம் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் ஸ்ரீநகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு கடும் எச்சரிக்கையும், மிரட்டலும் விடுத்துள்ளார். மெகபூபா முப்தி கூறும் போது, மக்கள் ஜனநாயக கட்சியை டெல்லி உடைக்க முயற்சித்தால் காஷ்மீரில் பிரச்னை மட்டும் தான் பெரிதாகும். சலாஹூதீன், யாசின் மாலிக் போன்ற ஏராளமான பிரிவினைவாதிகள் பிறந்து வருவார்கள். 1987 -ஐ போன்று மக்களுக்கு ஓட்டளிக்கும் உரிமையை மறுக்கடெ முயற்சித்தால், அது பிரிவினைகளையும், தலையீடுகளையும் தான் உருவாக்கும்.
நானும் சலாஹூதீன், யாசின் மாலிக் போன்றே சிந்திக்க வேண்டி இருக்கும். அவர்கள் மக்கள் ஜனநாயக கட்சியை உடைக்க முயற்சித்தால் விளைவுகள் மோசமானதாக இருக்கும். அதனை எதிர்கொள்ள டெல்லி தயாராகிக் கொள்ளட்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.