

புதுடெல்லி,
இந்திய பிரதமர் மோடி, சீனாவின் வுஹானில் நடைபெறும் 2 நாள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ளார். நேற்று இரவு தனி விமானம் மூலம் மோடி சீனா சென்றடைந்தார். சீனா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தநிலையில் பிரதமர் மோடி இன்று பிற்பகலில் ஹூபே மாகாணத்தில் உள்ள அருங்காட்சியகத்திற்கு சென்றார். அங்கு சீன அதிபர் சி ஜின்பிங் வரவேற்றார். இதனை தொடர்ந்து அருங்காட்சியகத்தை பார்வையிட்ட தலைவர்களை வரவேற்கும் விதமாக கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.
பின்னர் ஊகார் விருந்தினர் மாளிகையில் சீன அதிபருடன் அதிகாப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி பேசுகையில்,
இரு நாட்டு கலாச்சாரங்களுமே நதிக்கரையில் வளர்ந்தவை தான். ஊகானில் உள்ள த்ரி ஜார்ஜஸ் அணைகள் கட்டப்பட்ட விதம் தம்மை வெகுவாக கவர்ந்தது. நான் குஜராத் முதல்-மந்திரியாக இருந்த போது இந்த அணைகளை பார்வையிட வந்துள்ளேன்.
உலக மக்கள்தொகையில் 40 சதவிகிதம் வேலை செய்வதற்கான பொறுப்பை நாம் (இந்தியா-சீனா) பெறுவோம். உலகின் பல பிரச்சினைகளை வெற்றிகரமாக அகற்ற முயற்சிப்போம். இதை நோக்கி ஒன்றாக வேலை செய்ய எங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு இந்த உச்சி மாநாடு இரு நாடுகளுக்கும் ஒரு பாரம்பறியாக மாறும் என்று நான் நம்புகிறேன். 2019-ல் இத்தகைய உச்சிமாநாடு இந்தியாவில் நடைபெற்றால் நான் மகிழ்ச்சி அடைவேன். சீன அதிபர் சி ஜின்பிங் இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைப்புவிடுத்தார்.