மதம் மாறினால் பட்டியலினத்தவர் அந்தஸ்து இழப்பு - மறுஆய்வு செய்யக்கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

மதம் மாறியவர்கள் பட்டியலினத்தவர் அந்தஸ்தை இழப்பார்கள் என்ற உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
சுப்ரீம் கோர்ட்டு
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

ஆந்திர ஐகோர்ட்டு தீர்ப்பு உறுதி

பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர், கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவுடன் முழுமையாக தனது பட்டியலின அந்தஸ்தை இழப்பார் என்று ஆந்திர ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து இருந்தது. அதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆந்திர ஐகோர்ட்டு உத்தரவை உறுதி செய்து கடந்த மார்ச் 24-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

1950-ம் ஆண்டின் அரசியலமைப்பு (பட்டியலினம்) ஆணையின் 3-வது பிரிவில், இந்து மதத்தை பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே ஆரம்பத்தில் பட்டியலின அந்தஸ்து அளிக்கப்பட்டு இருந்தது. பின்னர், சட்ட திருத்தங்கள் மூலம் சீக்கியம், புத்த மதம் ஆகிய மதங்களை பின்பற்றுபவர்களும் சேர்க்கப்பட்டனர்.

சலுகைகள் இழப்பு

எனவே, 3 மதங்களை சேர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பட்டியலின அந்தஸ்து கிடைக்கும். இந்த மதங்கள் அல்லாத வேறு மதங்களுக்கு மாறியவர்கள் உடனடியாக தங்களது பட்டியலின அந்தஸ்தை இழப்பார்கள். பட்டியலினத்தினருக்கான சட்டப்பூர்வ சலுகைகள், இடஒதுக்கீடு, முன்னுரிமை, நலத்திட்டங்கள் ஆகியவற்றையும் இழப்பார்கள்.

ஒருவர் ஒரே நேரத்தில் ஆன்மிக காரணங்களுக்காக வேறு மதத்தை பின்பற்றிக்கொண்டு, இடஒதுக்கீடுக்காக இந்து மதத்தை பின்பற்ற முடியாது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

தள்ளுபடி

இதற்கிடையே, இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

மறுஆய்வு மனுவையும், கடந்த மார்ச் 24-ந்தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பையும் ஆய்வு செய்தோம். தீர்ப்பில் எந்த தவறும் இல்லை. எனவே, அதை மறுஆய்வு செய்யக்கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com