மராட்டிய மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தினால் சிவசேனா சுப்ரீம் கோர்ட்டை அணுகும்?

மராட்டிய மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தினால் சிவசேனா சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம். இதுகுறித்து கபில் சிபல் மற்றும் அகமது படேலுடன் உத்தவ் தாக்கரே விவாதித்து உள்ளார்.
மராட்டிய மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தினால் சிவசேனா சுப்ரீம் கோர்ட்டை அணுகும்?
Published on

மும்பை,

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா - சிவசேனா கூட்டணியில் மோதல் ஏற்பட்டதால் அந்த கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.

முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் தங்களுக்கு 2 ஆண்டுகள் தருமாறு சிவசேனா விடுத்த கோரிக்கையை ஏற்க பாரதீய ஜனதா மறுத்ததே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

இதையடுத்து 105 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பாரதீய ஜனதாவிடம், ஆட்சி அமைக்க விருப்பமா? என்று கவர்னர் பகத்சிங் கோஷியாரி கேட்க, அந்த கட்சி விருப்பம் இல்லை என்று கூறி பின்வாங்கி விட்டது.

இதனால் 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ள 2-வது பெரிய கட்சியான சிவசேனாவை நேற்று முன்தினம் கவர்னர், ஆட்சி அமைக்க அழைத்தார். இதனால் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கிய சிவசேனா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவை நாடியது.

இந்த நிலையில் ஆதித்ய தாக்கரே மற்றும் சட்டசபை சிவசேனா தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் மாலையில் மும்பையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்து பேசினார்கள்.

சிவசேனா குழுவினர் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்தனர். மேலும் ஆதரவு கடிதங்களை அளிக்க 3 நாட்கள் அவகாசம் கேட்டனர். ஆனால் அவகாசம் அளிக்க கவர்னர் மறுத்து விட்டார்.

அடுத்து 3-வது கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியுமா? என்பது பற்றி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.30 மணிக்குள் தன்னிடம் தெரிவிக்குமாறு அவர்களிடம் கவர்னர் கேட்டுக் கொண்டார்.

இதனால் மராட்டிய அரசியலில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இரவு 8.30 மணிக்குள் எம்.எல்.ஏ.க்கள் பற்றிய விவரங்களை வழங்குவது கடினம் என்று தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் அஜித் பவார் கூறி உள்ளார்.

இருந்தாலும் சரத்பவார் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். இருந்தாலும் சட்டப்பேரவை பதவிக் காலம் முடிந்துவிட்டதால் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு கவர்னர் பரிந்துரை என தகவல் வெளியாகி உள்ளது.

மராட்டிய மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டால் சிவசேனா சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து கபில் சிபல் மற்றும் அகமது படேலுடன் உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com