

பெங்களூரு,
பெங்களூருவைச் சேர்ந்த கார் பணிமனை உரிமையாளரான தொழில் அதிபர் வைஷாக் (வயது 45). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் மகன் உள்ளனர். இந்த நிலையில், அவருக்கும் நடிகை கிருஷி தாபண்டாவிற்கும் (36) இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து நடிகையின் வீட்டிலேயே வசித்து வந்தார்.
முன்னதாக, நடிகை கிருஷியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக திரைப்பட தயாரிப்பாளர் அரவிந்த் ரெட்டி என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் வைஷாக் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவத்தன்று இரவு நடிகை கிருஷி படப்பிடிப்பிற்காக நெலமங்களா சென்றிருந்தபோது, வைஷாக் அவருக்கு போன் செய்து தான் தற்கொலை செய்யப்போவதாகக் கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த நடிகை அவரை சமாதானப்படுத்திவிட்டு உடனடியாக வீட்டிற்கு விரைந்து வந்தார். ஆனால், அதற்குள் வைஷாக் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.