ஈரான் போர் தாக்கம்: பிரதமர் மோடி நாளை ஆலோசனை

வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களையும் ஈரான் தாக்கி வருகிறது.
ஈரான் போர் தாக்கம்: பிரதமர் மோடி நாளை ஆலோசனை
Published on

புதுடெல்லி,

ஈரானுக்கும். அமெரிக்காவுக்கும் இடையேயான அணு ஆயுத பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், அந்த நாட்டின் மீது கடந்த 28-ந் தேதி அமெரிக்கா திடீர் தாக்குதலை நடத்தியது.

இஸ்ரேலுடன் சேர்ந்து நடத்திய இந்த ராணுவ அதிரடியில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதனால் வெகுண்டெழுந்த ஈரான், இஸ்ரேலையும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களையும் தாக்கி வருகிறது.

வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி வரும் இந்த போர், ஒருவாரத்தை நிறைவு செய்து விட்டது. 9-வது நாளான இன்றும் இரு தரப்பும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளன. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் ஈரானுக்கு எதிராக போரை நடத்தி வரும் நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் சமையல் கியாஸ் விலை உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், ஈரான் போர் மேற்கு ஆசியாவில் பதற்றத்தை அதிகரித்து இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. எரிபொருள் விலை உயர்வு, வர்த்தக பாதை தடைகள் மற்றும் பங்கு சந்தை சரிவு இந்தியாவுக்கு சவாலாக உருவாகியுள்ளது. ஆததால் இந்த விவகாரம் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com