குடும்ப தகராறில் மகன் - மகளுடன் விஷம் குடித்த பெண்- சிறுமி சாவு

கொள்ளேகாலில் கணவனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் மகன், மகளுடன் பெண் ஒருவர் விஷம் குடித்தார். இதில் சிறுமி பலியானாள். அந்த பெண்ணுக்கும், அவரது மகனுக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடும்ப தகராறில் மகன் - மகளுடன் விஷம் குடித்த பெண்- சிறுமி சாவு
Published on

பெங்களூரு:-

குடும்ப தகராறு

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா மதுவனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசாமி. இவரது மனைவி ஷீலா(வயது 30). இவர்களுக்கு கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களது மகள் சிந்து(9), மகன் யஷ்வந்த்(8). திருமணம் முடிந்தது முதல் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

அதையடுத்து சண்முகசாமி வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார். இதனால் வீட்டில் தனியாக இருந்த ஷீலா தனது மகன், மகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதையடுத்து அவர் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) எடுத்து குடித்தார். மேலும் தன்னுடைய மகன், மகளுக்கும் கொடுத்து குடிக்க வைத்தார். இதனால் 3 பேரும் துடித்தனர்.

சிறுமி பலி

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கொள்ளேகாலில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மைசூருவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சிறுமி சிந்து பரிதாபமாக இறந்தாள்.

ஷீலாவுக்கும், யஷ்வந்துக்கும் மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கொள்ளேகால் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com