

புதுடெல்லி,
இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் காரணமாக கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. நேற்று ஒரேநாளில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 100 பேருக்கு புதிதாக கொரோனா உறூதி செய்யப்பட்டுள்ளது. இதனால், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா உச்சமடையும் என்று அமெரிக்காவை சேர்ந்த பிரபல மருத்துவ விஞ்ஞானி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில், உலகளாவிய சுதந்திரமான சுகாதார ஆராய்ச்சி மையம் என்ற மையம் இயங்கி வருகிறது.
இந்த மையத்தின் தலைவரும், அறிவியல் விஞ்ஞானியுமான டாக்டர் கிறிஸ்டோபர் முராரே இந்தியாவின் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், இந்தியாவை பொறுத்தவரை அடுத்த மாதம் கொரோனா உச்சம் பெறும் என நாங்கள் கருதுகிறோம். கொரோனா உச்சமடையும்போது தினமும் 5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படலாம். அதேவேளை கடந்த அலையான டெல்டா பாதிப்புடன் ஒப்பிடும்போது இப்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கபடுவோர் எண்ணிக்கையும், உயிரிழப்பும் குறைவாகவே இருக்கும் என்றார்.