

பெங்களூரு,
கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கர்நாடகத்தில் இன்று இரவு 9 மணி முதல் கடுமையான கட்டுப்பாடுகளை (முழு ஊரடங்கை) அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்த கட்டுப்பாடுகள் 14 நாட்கள் அமலில் இருக்கும்.
இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள், பால், இறைச்சி விற்பனை கடைகளுக்கு அனுமதி உண்டு. இந்த கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி இலவசமாக வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கு சுகாதாரத்துறை தனியாக வழிகாட்டுதலை வெளியிட உள்ளது. கர்நாடகத்தில் இனி ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை இல்லை. ஏனென்றால் மத்திய அரசு தினசரி ஆக்சிஜன் வினியோகத்தை 300 டன்னில் இருந்து 800 டன்னாக உயர்த்தியுள்ளது.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.