ஆண்களுக்கு சேலை உடுத்தி 100 நாள் வேலையில் மோசடி


ஆண்களுக்கு சேலை உடுத்தி 100 நாள் வேலையில் மோசடி
x

100 நாள் வேலையில் முறைகேட்டில் ஈடுபட்ட பஞ்சாயத்து அதிகாரி வீரேஷ் பணியிடை நீக்கம் செய்ப்பட்டார்.

பெங்களூரு,

கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ், 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை இந்த திட்டம் அளிக்கிறது.

இந்த நிலையில், 100 நாள் வேலைத்திட்டத்தில் ஆண்களுக்கு சேலை உடுத்தி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கர்நாடகாவில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அங்குள்ள யாத்கிரி மாவட்டம் மல்தார் கிராமத்தில் சன்னலிங்கப்பா என்பவரின் பண்ணை அருகில் கால்வாய் அமைக்கும் பணி நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் என பலரும் ஈடுபட்டிருந்தனர். இந்த பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களின் குழு படம், அரசின் என்.எம்.எஸ்., எனும் தேசிய கண்காணிப்பு அமைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இந்த படத்தை பார்த்த அதிகாரிகள், சேலை அணிந்திருந்த நான்கு பெண்களின் தோற்றத்தில் வித்தியாசம் இருந்ததை கவனித்தனர். அந்த படத்தை உற்றுப் பார்த்தபோது, அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் சேலை உடுத்தியிருந்த அந்த நான்கு பேரும் ஆண்கள் என கண்டுபிடித்தனர். மேலும் இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதையடுத்து 100 நாள் வேலையில் முறைகேட்டில் ஈடுபட்ட பஞ்சாயத்து அதிகாரி வீரேஷ் பணியிடை நீக்கம் செய்ப்பட்டார். இதுகுறித்து, மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி லாவிஷ் ஓராடியா கூறியதாவது, இந்த சம்பவம் பிப்ரவரியில் நடந்துள்ளது. இது தொடர்பாக வந்த புகாரை அடுத்து விசாரணை நடத்தப்பட்டது. முறைகேட்டில் ஈடுபட்ட பஞ்சாயத்து அதிகாரி வீரேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நரேகா திட்டத்தின் கீழ், இதுவரை பணம் எதுவும் விடுவிக்கப்படவில்லை என்று கூறினார்.

1 More update

Next Story