

ஸ்ரீநகர்,
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஸ்ரீநகரில் உள்ள ராணுவ முகாம்கள், ராணுவ நிலைகள் உள்ளிட்ட ராணுவ இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லை பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை போன்றவற்றுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. போலீஸ் நிலையங்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஸ்ரீநகரை சுற்றிலும் மேலும் பல பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரிய ஆஸ்பத்திரிகள், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களை சுற்றிலும் இந்த பதுங்கு குழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊடுருவல் நடக்க வாய்ப்புள்ள இடங்களில் மேலும் பல சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.