ஒடிசாவில், 2 முறை, வெள்ளி கிழமை இரவில்... விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில்

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் 2 முறை, வெள்ளி கிழமை இரவில் விபத்தில் சிக்கியுள்ள விவரம் தெரிய வந்து உள்ளது.
ஒடிசாவில், 2 முறை, வெள்ளி கிழமை இரவில்... விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில்
Published on

பாலசோர்,

ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒரே கிழமையில், ஒரே நேரத்தில், 2 முறை விபத்தில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்து உள்ளது.

கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் ஒடிசாவில் ஒரு வெள்ளி கிழமை இரவில், இதேபோன்றதொரு விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் சிக்கியது.

2009-ம் ஆண்டு, பிப்ரவரி 13-ந்தேதி ஒடிசாவின் ஜஜ்பூர் மாவட்டத்தில் இரவில், அதிவிரைவாக சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளம் மாறி சென்றபோது, தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.

இதில், 13 பெட்டிகள் தடம் புரண்டன. அவற்றில் 11 பெட்டிகள் படுக்கை வசதி கொண்டவை. 2 பொது பெட்டிகளும் அடங்கும். இந்த சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்தனர். 161 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஒடிசாவின் ஜஜ்பூர் சாலை ரெயில்வே நிலையம் கடந்து, அதிவேகத்தில் ரெயில் சென்று கொண்டிருந்தபோது, வேறு தண்டவாளத்தில் பயணித்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. இதில், ரெயிலின் என்ஜின் வேறு தண்டவாளத்தில் சென்றபோது, பெட்டிகள் தனியாக கழன்று ஓடின.

அவை, ரெயிலில் இருந்து தொடர்பற்று பிரிந்து விபத்தில் சிக்கின. பெட்டி மீது மற்றொரு பெட்டி ஏறி அலங்கோல காட்சியளித்தது. அதுவும் இரவு 7.30 மணியளவில் விபத்து நடந்திருந்தது.

இந்த நிலையில், 2023-ம் ஆண்டு ஜூன் 2-ந்தேதி, வெள்ளி கிழமை இரவில் ஒடிசாவில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றொரு விபத்தில் சிக்கி உள்ளது.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பகனாகா பஜார் அருகே நேற்று இரவு 7 மணியளவில் பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த ரெயில் தடம் புரண்டது. தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்ட அந்த ரெயிலின் பெட்டிகள் சில அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்தன.

அப்போது, அந்த தண்டவாளத்தில் வேகமாக வந்த ஷாலிமார்-சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்ட பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த சரக்கு ரெயில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது.

அடுத்தடுத்து 2 பயணிகள் ரெயில், 1 சரக்கு ரெயில் என மொத்தம் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை 261 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் நிறைவடைந்து, மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

மேற்கு வங்காளம் மற்றும் தமிழகம் இடையே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பயணிக்கிறது. அது, 2 முறையும் ஒடிசாவில், இரவு நேரத்தில், வெள்ளி கிழமையில் என பல விசயங்களில் ஒத்து போகும் வகையில், விபத்தில் சிக்கி உள்ளது. இரண்டு முறையும், ரெயில் விரைவாகவும், தண்டவாளம் மாறி சென்றபோது விபத்தில் சிக்கி உள்ளது சோகம் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com