

சிக்கமகளூரு-
சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா லக்குவல்லி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. குறிப்பாக பூட்டி இருக்கும் வீட்டை குறிவைத்து மர்மநபர்கள் நகை, பணத்தை திருடிவிட்டு சென்றனர். இதுகுறித்து லக்குவல்லி போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மர்மநபர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் வீட்டில் திருடும் மர்ம கும்பலை தேடி வந்தனர். இந்தநிலையில், லக்குவல்லி போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அந்த நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் லக்குவல்லி டவுன் பகுதியை சேர்ந்த சசிதர் நாயக் (வயது45) என்பதும், அப்பகுதியில் உள்ள வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்க நகை, 3 செல்போன்கள், மடிக்கணினி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் சசிதர் நாயக்கை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.