கர்நாடகத்தில் 5 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்: 4 இடங்களில் காங். கூட்டணி அமோக வெற்றி - ஒரு தொகுதியில் பா.ஜனதா வெற்றி

கர்நாடகத்தில் 5 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், 4 இடங்களில் காங். கூட்டணி அமோக வெற்றிபெற்றது. ஒரு தொகுதியை மட்டும் பா.ஜனதா தக்கவைத்தது.
கர்நாடகத்தில் 5 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்: 4 இடங்களில் காங். கூட்டணி அமோக வெற்றி - ஒரு தொகுதியில் பா.ஜனதா வெற்றி
Published on

பெங்களூரு.

கர்நாடகத்தில் எம்.பி.க்களாக இருந்த முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா(சிவமொக்கா), ஸ்ரீராமுலு(பல்லாரி), புட்டராஜூ(மண்டியா) ஆகியோர் கடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றனர்.

இதையடுத்து அவர்கள் 3 பேரும் தங்களின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கர்நாடகம் சார்பில் நாடாளுமன்றத்தில் சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 தொகுதிகள் காலியாக இருந்தன.

அதுபோல் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகர், சென்னப்பட்டணா ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து ராமநகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். மேலும் ஜமகண்டி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வான சித்து நியாமகவுடா, சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இதனால் கர்நாடக சட்டசபையில் ராமநகர் மற்றும் ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாகின.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள மண்டியா, பல்லாரி, சிவமொக்கா ஆகிய 3 தொகுதிகளுக்கும், சட்டமன்றத்தில் காலியாக இருக்கும் ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கும் கடந்த 3-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது.

அதில், 2 நாடாளுமன்ற மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. ஒரு நாடாளுமன்ற தொகுதியை மட்டும் பா.ஜனதா தக்க வைத்தது. இதன் மூலம் பா.ஜனதா படுதோல்வியை சந்தித்து உள்ளது.

மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் சிவராமகவுடா, 3 லட்சத்து 24 ஆயிரத்து 943 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பல்லாரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா 2 லட்சத்து 43 ஆயிரத்து 161 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது கடந்த 15 ஆண்டுகளாக பா.ஜனதாவின் கோட்டையாக திகழ்ந்த தொகுதியாகும். `

சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் பா.ஜனதா வேட்பாளரும், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகனுமான பி.ஒய்.ராகவேந்திரா, 47 ஆயிரத்து 388 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

ராமநகர் சட்டமன்ற தொகுதியில், ஜனதா தளம்( எஸ்) வேட்பாளரும், முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவியுமான அனிதா 1 லட்சத்து 9 ஆயிரத்து 137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஜமகண்டி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எஸ்.நியமகவுடா 39 ஆயிரத்து 480 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இடைத்தேர்தல் வெற்றியை காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்( எஸ்) தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையிலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற நிலையிலும் கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சியினருக்கு சாதகமான சூழலை உருவாக்கி உள்ளது.

காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் இந்த வெற்றியைப் பதிவு செய்யும் என கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com