

பொதுநல வழக்கு விசாரணை
குஜராத் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி நிலவரம் மற்றும் கொரோனா தொடர்பான பிற பிரச்சினைகளை அங்குள்ள ஐகோர்ட்டு தானாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டுள்ளது.இந்த வழக்கு நீதிபதிகள் பேலா திரிவேதி, பார்கவ் டி.கரியா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
2-வது அலையைப் போன்று 3-வது மற்றும் 4-வது அலை வந்தால் என்ன ஆகும்? 3-வது அலையைத் தொடர்ந்து 4-வது அலையும் வரும்.ஏனென்றால், மாநில மக்கள் முக கவசம் அணிய வேண்டும், தனி மனித இடைவெளியை பின்பற்றவேண்டும், சானிடைசர் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்பது போன்ற கொரோனா கால நடத்தைகளை பின்பற்றப்போவதில்லை. இந்த நாட்டில் யாரும் இதைச்செய்யப்போவதில்லை. எனவே 6 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு அலை வரும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.
சீனாவின் ஒழுக்கத்தை அமல்படுத்த முடியாது
உடனே அட்வகேட் ஜெனரல் கமல் திரிவேதி, இந்தியாவை ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட்டு, 7 முன்னேறிய நாடுகள் ஒன்றிணைந்து தொற்றுநோயால் அதிக உயிரிழப்புகளையும், துன்பங்களையும் கண்டதாக கூறினார்.அதற்கு நீதிபதிகள், நீங்கள் இந்தியாவை ஒப்பிடக்கூடிய ஒரே நாடு சீனாதான். ஆனால் சீனாவை ஒப்பிட முடியாது. சீனாவில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை இங்கே நடைமுறைப்படுத்த முடியாது. எனவே மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை நீங்கள் மேம்படுத்துங்கள் என கூறினார்கள்.