கள்ளக்காதலியின் மகனை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை- கோர்ட்டு தீர்ப்பு

கள்ளக்காதலியின் மகனை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை அபராதமும் விதித்து நீதிபதி ரவீந்திரா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கள்ளக்காதலியின் மகனை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை- கோர்ட்டு தீர்ப்பு
Published on

ஆனேக்கல்:-

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சப்மங்களா கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருந்தது. இந்த கள்ளத்தொடர்புக்கு அந்த பெண்ணின் மகனான சிறுவன் இடையூறாக இருந்துள்ளான். இதையடுத்து, கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சிறுவனின் கழுத்தை நெரித்து வெங்கடேஷ் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆனேக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தலைமறைவாக இருந்த பெண்ணின் கள்ளக்காதலன் வெங்கடேசை கைது செய்திருந்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை பெங்களூரு புறநகர் கோர்ட்டில் நீதிபதி ரவீந்திரா முன்னிலையில் நடைபெற்று வந்தது. சிறுவன் கொலை தொடர்பாக வெங்கடேஷ் மீது ஆனேக்கல் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். வழக்கு விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் சிறுவனை வெங்கடேஷ் கொலை செய்திருப்பது ஆதாரத்துடன் நிரூபணமாகி உள்ளதால், அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ரவீந்திரா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com