கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) தோல்வி: மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன் - குமாரசாமி கருத்து

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல் முடிவு குறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) தோல்வி: மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன் - குமாரசாமி கருத்து
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல் முடிவு குறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தல் முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். எங்கள் கட்சியின் சார்பாக பணியாற்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தோல்வியை கண்டு ஜனதா தளம்(எஸ்) கட்சி தொண்டர்கள் துவளக்கூடாது.

அரசியல் கட்சிகளின் எதிர்காலத்தை இடைத்தேர்தல் முடிவுகள் நிர்ணயிப்பது இல்லை. இடைத்தேர்தல் எப்படி நடந்தது என்பது குறித்து விவாதிக்க விரும்பவில்லை. மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன். முன்பு ஒருமுறை எங்கள் கட்சியின் தேசிய தலைவரை மக்கள் ஆதரிக்கவில்லை. தொடக்கத்தில் 2 இடங்களில் மட்டுமே எங்கள் கட்சி வெற்றி பெற்றது.

அதன் பிறகு இதே மக்கள் தான் அவரை இந்த மாநிலத்தின் முதல்-மந்திரி பதவியில் அமர்த்தினர். பிரதமர் பதவியையும் அவர் அலங்கரித்தார். இடைத்தேர்தல் முடிவை கண்டு ஏமாற்றம் அடையாமல், கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபடுவேன். பா.ஜனதா அரசு கடந்த 15 மாதங்களில் செய்த பணிக்கு இந்த வெற்றி கிடைத்திருக்கும் என்று நான் கருதுகிறேன்.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com