

ஜெய்பூர்,
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் பதிவாகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6,658 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அம்மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,87,950 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது 49,276 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனா பாதிப்பால் நேற்று 33 பேர் உயிரிழக்க, தொற்று பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 3,041 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 2,254 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில் இதுவரை 3,35,633 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனிடையே கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று (ஏப்ரல் 16-ம் தேதி) மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19-ந்தேதி காலை 5 மணி வரை (அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி அஷோக் கெலாட் அறிவித்துள்ளார்.
முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் ஏப்ரல் 16 முதல் 30-ந்தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.