வாராக்கடன் விவகாரத்தில் 6 ஆயிரம் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை : அருண் ஜெட்லி தகவல்

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் விவகாரத்தில் கடந்த 2017–18–ம் நிதியாண்டில் 6,049 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறினார்.
வாராக்கடன் விவகாரத்தில் 6 ஆயிரம் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை : அருண் ஜெட்லி தகவல்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் கோடிக்கணக்கில் வாராக்கடன் தேங்கி கிடக்கிறது. இந்த கடன் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி எழுத்து மூலம் நேற்று பதிலளித்தார்.

அந்த பதிலில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில், வங்கி அதிகாரிகள் தங்கள் கடமை தவறியதன் மூலம் வாராக்கடன் உயர்வுக்கு காரணமாக இருந்ததாக கடந்த 201718ம் நிதியாண்டில் 6,049 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த தவறின் அடிப்படையில் மேற்படி அதிகாரிகளுக்கு குறைந்த அபராதம் முதல் பெரிய அளவிலான அபராதம் வரை விதிக்கப்பட்டு உள்ளதாக கூறிய அருண் ஜெட்லி, வாராக்கடன் தொகை அடிப்படையில் அவர்களுக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை முதல் சி.பி.ஐ.யில் புகார் வரை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் பணி நீக்கம், கட்டாய ஓய்வு மற்றும் பதவி இறக்கம் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அருண் ஜெட்லி கூறினார்.

இதற்கிடையே நிதித்துறை இணை மந்திரி சிவ்பிரதாப் சுக்லாவும் வாராக்கடன் தொடர்பாக மக்களவையில் எழுத்து மூலம் பதில் அளித்தார். அவர் கூறுகையில், பொதுத்துறை வங்கிகளில் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் இறுதியில் ரூ.5.66 லட்சம் கோடியாக இருந்த வாராக்கடன், கடந்த மார்ச் இறுதியில் ரூ.9.62 லட்சம் கோடியாக அதிகரித்து இருப்பதாக தெரிவித்தார். தற்போது அது ரூ.9.43 லட்சம் கோடியாக குறைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

எனினும் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு காலகட்டத்தில் சாதனை அளவாக ரூ.60,713 கோடி கடன் வசூலிக்கப்பட்டு இருப்பதாக கூறிய சுக்லா, இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட தொகையை விட இரு மடங்கு அதிகம் என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com