கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இந்திய அளவில் கர்நாடகம் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், இந்திய அளவில் தமிழகத்தை பின்னுக்கு தள்ளி கர்நாடகம் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இந்திய அளவில் கர்நாடகம் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்
Published on

பெங்களூரு,

சீனாவில் உகான் நகரில் கடந்த ஆண்டு(2019) டிசம்பர் மாதம் கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் தோன்றியது. அங்கு பல உயிர்களை காவு வாங்கிய கொரோனா தனது தாக்கத்தை பல நாடுகளில் தொடுத்தது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 61 லட்சத்து 45 ஆயிரத்து 291 ஆக உயர்ந்து உள்ளது.

அனைத்து மாநிலங்களில் கொரோனா தனது கோரப்பிடியை இறுக்கி உள்ளது. குறிப்பாக மராட்டியத்தில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதன்பின்னர் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதித்தோர் அதிகம் உள்ள மாநிலங்களில் மராட்டியம் முதல் இடத்திலும், ஆந்திரா 2-வது இடத்திலும், தமிழ்நாடு 3-வது இடத்திலும், கர்நாடகா 4-வது இடத்திலும் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கர்நாடகத்தில் ஒரே நாளில் 10 ஆயிரத்து 453 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இது தான் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பில் புதிய உச்சம் ஆகும்.

இதன்மூலம் 3-வது இடத்தில் இருந்து தமிழகத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் கர்நாடகம் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 5 லட்சத்து 92 ஆயிரத்து 911 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 756 பேர் சிகிச்சையில் உள்ளனர். 4 லட்சத்து 76 ஆயிரத்து 378 பேர் குணம் அடைந்து உள்ளனர். 8 ஆயிரத்து 777 பேர் இறந்து உள்ளனர். தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 5 லட்சத்து 91 ஆயிரத்து 943 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com