

புதுடெல்லி,
பிரதமராக பதவி வகித்து வந்த இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின்போது 2 பேரை கொன்றதாக யஷ்பால் சிங் என்பவர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக நரேஷ் ஷெராவத் என்பவர் மீதும் டெல்லி போலீசார் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி அஜய் பாண்டே முன்பாக நடந்த வந்தது. இந்த வழக்கில் யஷ்பால் சிங், நரேஷ் ஷெராவத் இருவரும் குற்றவாளிகள் என்று கடந்த 14-ந் தேதி நீதிபதி அறிவித்தார். இவர்களுக்கான தண்டனை விவரத்தை நீதிபதி நேற்று அறிவித்தார். அப்போது யஷ்பால் சிங்கிற்கு அவர் தூக்குத் தண்டனை விதித்தும், நரேஷ் ஷெராவத்துக்கு ஆயுள்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
குற்றவாளிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தினால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் பாதுகாப்பு காரணம் கருதி அவர்கள் அடைக்கப்பட்டுள்ள திகார் சிறைக்கே சென்று நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.
சீக்கியர் கலவரத்துக்கு எதிராக பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் ஒரு குற்றவாளிக்கு முதல் முறையாக தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.