

புனே,
நாட்டில் புகையிலை பழக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்கள், முதியவர்கள் என மொத்தம் 12 லட்சம் பேர் உயிர் இழக்கின்றனர். இதில் பீடி குடிக்கும் பழக்கம் மட்டும் 6 லட்சம் பேரின் உயிரை பறிக்கிறது. குறிப்பாக, நாட்டின் மொத்த புகையிலை உற்பத்தியில் பீடி உற்பத்தி மட்டும் 80 முதல் 90 சதவீதத்தை ஆக்கிரமிக்கிறது. அத்துடன், சிகரெட் விற்பனையை காட்டிலும் பீடி விற்பனை 8 மடங்கு அதிகம் என்பது கூடுதல் தகவல்.
ஆகையால், பீடி உள்பட அனைத்து புகையிலை பொருட்களின் விலையையும், சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) விதிப்பின்போது உயர்த்த கோரி பிரதமர் மோடிக்கு புனே டாடா நினைவக ஆஸ்பத்திரியை சேர்ந்த தலைமை டாக்டர் பங்கஜ் சதுர்வேதி கடிதம் எழுதியிருக்கிறார்.
அதில், இந்தியாவின் புகையிலை வரி விதிப்பில் காணப்படும் வரலாற்று பிறழ்வுகளை சரிசெய்ய ஜி.எஸ்.டி. தங்கமான வாய்ப்பு. இந்திய குடிமக்களின் நலன் கருதி, குறிப்பாக வருங்கால இளைய தலைமுறையின் நலனை கருத்தில் கொண்டு, பீடி உள்பட அனைத்து புகையிலை பொருட்களையும் தீமையான பொருட்கள் வரிசையில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று கூறியிருக்கிறார். நாட்டில் 9.2 சதவீத இளைஞர்கள் பீடிக்கும், 5.7 சதவீத இளைஞர்கள் சிகரெட் பழக்கத்துக்கும் அடிமையாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.