

புதுடெல்லி,
பெட்ரோலிய பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் கீழ் கொண்டு வர மத்திய அரசு, விரும்புவதாகவும், எனினும் மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகே, இத்தகைய முடிவை மத்திய அரசு எடுக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் எம்.பி, கேள்வி ஒன்றை முன்வைத்தார். அதாவது, பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டிக்குள்
கொண்டு வருவது பற்றி மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ''பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவை, ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் கொண்டு வருவதற்கு மத்திய அரசு ஆதரவு தெரிவிக்கிறது. எனினும் பெட்ரோலிய பொருட்களுக்கு பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு விகிதங்களில் மதிப்புக்கூட்டு வரி வசூலிக்கப்படுகிறது.
எனவே இவற்றை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பேசி முடிவெடுக்க வேண்டும். மாநில அரசுகளின் ஒப்புதலுடன் மட்டுமே இதை செயல்படுத்த முடியும். அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டு அதனடிப்படையில் முடிவெடுக்கப்படும்'' என கூறினார்.