

சிக்கமகளூரு:
சிக்கமகளூருவில் நேற்று மாவட்ட பா.ஜனதா செய்தி தொடர்பாளர் தீபக் தொட்டய்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.சி. காயத்ரி சாந்தேகவுடா வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது. இதற்கும் சிக்கமகளூரு பா.ஜனதா எம்.எல்.ஏ. சி.டி.ரவிக்கும், பா.ஜனதா கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள், வரி செலுத்தாதவர்களின் வீடுகளில் சோதனை நடத்த வருமான வரித்துறைக்கு அதிகாரம் உள்ளது. அந்த வகையில் சிக்கமகளூருவில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.சி. வீட்டில் சோதனை நடந்துள்ளது. ஆனால், இந்த சோதனைக்கு பா.ஜனதா தான் காரணம் என்று காங்கிரசார் குற்றம்சாட்டுகிறார்கள். அரசியல் லாபம் தேடுவதற்காக காங்கிரஸ் கட்சியினர் இதுபோன்ற குற்றச்சாட்டை கூறுகிறார்கள். பா.ஜனதாவுக்கு என தனி சித்தாந்தம் உண்டு. சிக்கமகளூரு தொகுதியில் பா.ஜனதாவுக்கு மக்கள் பலம் அதிகமாக உள்ளது. இதனை சகித்து கொள்ள முடியாமல் காங்கிரஸ் கட்சியினர் பேசி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.