தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து பெங்களூரு உள்பட 3 மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களின் அலுவலகங்கள், உரிமையாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை
Published on

பெங்களூரு:

வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து பெங்களூரு உள்பட 3 மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களின் அலுவலகங்கள், உரிமையாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வருமான வரித்துறை சோதனை

பெங்களூருவில் வருமான வரி சரியாக செலுத்தாமல், வரி ஏய்ப்பு செய்து வரும் நிறுவனங்கள் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சிக்கமகளூருவில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பெங்களூரு, ராமநகரில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து, அந்த கார்ப்பரேட் நிறுவனங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், பெங்களூரு சஞ்சய்நகர், ஹெப்பால், கொடிகேஹள்ளி, ராமநகர், பிடதி, சிக்பள்ளாப்பூரில் உள்ள தனியார் நிறுவனங்கள், அந்த நிறுவன உரிமையாளர்களின் வீடுகள் என 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் நேற்று அதிகாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

வங்கி கணக்குகள் பரிசீலனை

கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், தனித்தனி குழுக்களாக பிரிந்து சென்று இந்த சோதனையை மேற்கொண்டனர். கொடிகேஹள்ளியில் உள்ள பிரிகேட் குரூப் நிறுவனத்தின் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதுபோல், ஹெப்பால், சஞ்சய்நகரில் உள்ள தனியார் நிறுவனத்தின் மீதும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு இருந்தது.

சோதனையின் போது அந்த தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகளிடம், வருமான வரித்துறையினர் விசாரித்து தகவல்களை பெற்றுக் கொண்டனர். அத்துடன் நிறுவனத்தில் இருந்து ஆவணங்களையும் பரிசீலனை நடத்தினார்கள். மேலும் வங்கி கணக்குகள், வங்கி பண பரிமாற்றங்கள் குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் பரிசீலனை நடத்தினார்கள்.

முக்கிய ஆவணங்கள் சிக்கியது

பெங்களூருவை போன்று ராமநகரிலும், பிடதியிலும், சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடந்தது. நேற்று அதிகாலையில் இருந்து இரவு வரை வருமான வரித்துறை அதிகாரிகள் தனியார் நிறுவனங்களில் சோதனை நடத்தி இருந்தார்கள். சோதனையின் போது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்து மோசடி செய்திருப்பதுடன், போலியான பெயரில் நிறுவனத்தை தொடங்கி பண பரிமாற்றம் செய்ததை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த நிறுவனங்களில் இருந்து வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள், வங்கி ஆவணங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. அந்த ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்த, அவர்களுக்கு நோட்டீசு அனுப்பவும் வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com