

வருமான வரிசோதனை
மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான சர்க்கரை ஆலைகள், நிறுவனங்களில் கடந்த வியாழக்கிழமை வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வருமான வரித்துறையின் இந்த சோதனை குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான தேவேந்திர பட்னாவிஸ் நேற்று கூறியதாவது:-
யாருக்கும் எதிரானதில்லை
மராட்டியத்தில் ரூ.1,000 கோடி ரூபாய் அளவுக்கு பண மோசடி செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக வருமான வரித்துறையினர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அரசியல் கட்சி தலைவர்கள், பல அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருப்பது வருமான வரித்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்த சோதனை எந்த ஒரு குடும்பத்தினருக்கும் எதிரான இல்லை சர்க்கரை ஆலை இயக்குனர்களுக்கு எதிரான நடவடிக்கையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நவாப் மாலிக் குற்றச்சாட்டு
இதேபோல சொகுசு கப்பலில் சோதனையின்போது பா.ஜனதாவின் உறவினர் சிக்கியதாகவும், அவர் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் கூறி குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பலரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் மீது தவறு இல்லாத பட்சத்தில் விடுவித்தனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமான நபர் ஒருவரும் பிடிபட்டார். அவர் தவறு செய்யவில்லை என தெரிந்ததால் விடுவிக்கப்பட்டார் என்று கூறினார்.