

புதுடெல்லி,
2020-2021-ம் ஆண்டுக் கான மத்திய அரசின் பட்ஜெட்டை (வரவு- செலவு திட்டம்) நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த அவர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வது இது 2-வது தடவை ஆகும்.
பட்ஜெட் உரையை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, புதிய வரிகள், வரிச்சலுகைள், வருமான வரிவிகிதங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.
மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது, பொருளாதார வளர்ச்சியின் பலன் அனைவரையும் சென்றடைவது, மனிதாபிமான அடிப்படையிலான சமுதாயத்தை உருவாக்குவது ஆகிய 3 முக்கிய அம்சங்களை உள்ளடக்கி பட்ஜெட்டை தயாரித்து இருப்பதாக அவர் கூறினார்.
நடுத்தர மக்கள் மற்றும் மாதச் சம்பளம் பெறுவோரின் நலனை கருத்தில் கொண்டும், மக்களின் வாங்கு திறனை அதிகரிக்கும் நோக்கத்திலும் தனிநபர் வருமான வரி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளதாக கூறிய நிர்மலா சீதாராமன், பட்ஜெட் உரையின்போது, திருக்குறள், ஆத்திச்சூடி ஆகியவற்றை அவர் மேற்கோள் காட்டினார்.