

புதுடெல்லி,
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்திய ஏ.ஐ. தாக்க எக்ஸ்போ 2026 நாளை தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது. பிரதமர் மோடி கலந்து கொண்டு இந்த கண்காட்சியை நாளை துவக்கி வைக்கிறார். 70 ஆயிரம் சதுர மீட்டருக்கும் கூடுதலான பரப்பளவில் இது நடத்தப்படுகிறது.
இந்த கண்காட்சியில் பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த தொழில் நுட்ப நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆய்வு மையங்கள், மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் சர்வதேச பங்குதாரர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த கண்காட்சியில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் சேர்த்து, ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடும் நாளை தொடங்கி நடைபெற உள்ளது. இந்த உச்சி மாநாடானது, உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில் நடைபெற கூடிய முதல் உச்சி மாநாடு என்ற அளவில் பெருமையை பெற்றுள்ளது.
பிரதமர் மோடியின் அழைப்பையேற்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல் நாஹியான், சுலோவேக்கியா நாட்டு ஜனாதிபதி பீட்டர் பெல்லேகிரினி உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வருகை தருகின்றனர்.