இந்திய-சீன படையினர் இடையே மீண்டும் மோதல்; சீன வீரர்கள் சிறைபிடிப்பு

அருணாச்சலபிரதேச எல்லையில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே கடந்த வாரம் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்திய-சீன படையினர் இடையே மீண்டும் மோதல்; சீன வீரர்கள் சிறைபிடிப்பு
Published on

இட்டா நகர்,

இந்திய-சீன படைகள் கடந்த ஆண்டு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. இதனால், அமைதியை ஏற்படுத்தும் வகையில் இருநாடுகளும் பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், இரு நாடுகளும் எல்லையில் வீரர்களை குவித்து வைத்துள்ளன.

இந்நிலையில், அருணாச்சலபிரதேச எல்லையில் இந்திய-சீன வீரர்கள் கடந்த வாரம் மோதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபெத் வழியாக அருணாச்சலபிரதேசத்தின் தங்வாங் பகுதிக்குள் கடந்த வாரம் 200 சீன வீரர்கள் நுழைய முயற்சித்துள்ளனர். அவர்கள் அங்கு இருந்த சோதனைச்சாவடிகளை சேதப்படுத்த முயற்சித்துள்ளனர்.

அப்போது, அங்கு விரைந்த இந்திய பாதுகாப்பு படையினர் சீன வீரர்களை தடுத்துள்ளனர். இதனால், இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சீன வீரர்கள் தங்கள் நாட்டின் எல்லைக்கே திரும்பி சென்றுள்ளனர். இந்த மோதலின் போது சீன வீரர்கள் சிலரை இந்திய படையினர் சிறைபிடித்தனர்.

இதனை தொடர்ந்து இருநாட்டு படையினரின் உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு பின்னர் சிறைபிடிக்கப்பட்ட சீன வீரர்களை இந்திய படையினர் விடுதலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோதலின் போது சீன வீரர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

லடாக் மோதல் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழ்நிலையில் அருணாச்சலபிரதேச எல்லையில் இந்திய சீன வீரர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com