ஓமன் கடல் பகுதியில் இந்திய கொடியுடன் கூடிய கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

அவர்களை மீட்டதற்காக ஓமன் நாட்டு அதிகாரிகளுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்று அறிக்கை தெரிவிக்கின்றது.

ஓமன் கடல் பகுதியில் இந்திய கொடியுடன் கூடிய கப்பல் மீது தாக்குதல்:  இந்தியா கண்டனம்
Published on

புதுடெல்லி

மேற்காசிய போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஈரான் அதனை எதிர்க்கும் வகையில், ஹார்மூஸ் ஜலசந்தியை மூடியது. கண்ணிவெடிகளையும் புதைத்து வைத்தது. இந்த பகுதியில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் கடந்து செல்ல கூடிய நிலையில், ஈரான் நடவடிக்கையால் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலை, 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

இதனால் உலகளாவிய அளவில் எரிபொருள் விலை ஏற்றம் கண்டு வருகிறது. கப்பல்களின் இயக்கம் சீராவதற்காக உலக நாடுகள் ஈரானை வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஓமன் கடல் பகுதியில் இந்திய கொடியுடன் கூடிய வர்த்தக கப்பல் ஒன்று சென்றபோது அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது. இதனை ஏற்று கொள்ள முடியாது என தெரிவித்ததுடன், அரசு தரப்பில் கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், ஓமன் கடல் பகுதியில் இந்திய கொடியுடன் கூடிய வர்த்தக கப்பல் மீது நேற்று நடந்த தாக்குதலை ஏற்று கொள்ள முடியாது.

தொடர்ந்து வர்த்தக கப்பல் மீதும், கப்பல் ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடந்து வருவதற்கு நாங்கள் கடுமையான கண்டனம் தெரிவிக்கிறோம் என்று தெரிவித்து உள்ளது. எனினும், இந்த சம்பவத்தில் இந்திய ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

அவர்களை மீட்டதற்காக ஓமன் நாட்டு அதிகாரிகளுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது. கடல்சார் வர்த்தக வழிகளையும், சர்வதேச நீர்நிலைகளில் செயல்பட்டு வரும் அதிகாரிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது என்றும் இந்தியா வலியுறுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com