

புதுடெல்லி,
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நீண்ட நாட்களாகப் பேச்சுவார்த்தையில் இருந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், வரும் ஜூலை 15-ந்தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவுள்ளது. 14 சுற்றுகளாக நடத்தப்பட்ட தீவிரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதன்படி இங்கிலாந்து சந்தைக்குள் நுழையும் 85 சதவீதத்துக்கும் அதிகமான இந்தியப் பொருட்களுக்கு உடனடி வரிவிலக்கு அளிக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் இது 95 சதவீதமாகஉயர்த்தப்படும். இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்காட்ச், விஸ்கி உள்ளிட்ட மதுபானங்கள் மீதான வரி 150 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் ஆக உடனடியாகக் குறைக்கப்படும்.
அதேபோல், சொகுசு மின்சார வாகனங்கள் மீதான இறக்குமதி வரி 100 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்கப்படும். ஜூலை மாத தொடக்கத்தில் லண்டனில் நடைபெறவுள்ள இரு நாட்டு மந்திரிகள் கூட்டத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டு, ஜூலை 15 முதல் இந்த விதிகள் நடைமுறைக்கு வரவுள்ளன.