இந்தியா மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளி இலக்கில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி,

செவ்வாய், நிலவைத் தொடர்ந்து சூரியனின் புறவெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆராயும் முனைப்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதன்படி ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை வடிவமைத்து பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் கடந்தாண்டு செப்டம்பர் 2-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் எனும் எல்-1 புள்ளியில், பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசை சமமாக இருக்கும். அந்தப் புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆதித்யா விண்கலம், சூரிய புறவெளியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு உள்ளிட்டவை குறித்து ஆராய உள்ளது.

ஏறத்தாழ 127 நாட்கள் பல கட்ட பயணத்தை மேற்கொண்ட ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளி இலக்கில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடி விஞ்ஞானிகள் இந்தப் பணிகளை மேற்கொண்டனர். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த விண்கலம் சூரியன் குறித்த ஆய்வை மேற்கொள்ளும்.

இந்த நிலையில் விண்வெளி துறையில் புதிய மைல் கல்லை எட்டியுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியா மற்றொரு மைல்கல்லை உருவாக்கியுள்ளது. சூரிய குடும்பத்தை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா-எல்1 வெற்றிகரமாக இலக்கை அடைந்துள்ளது

மிகவும் சிக்கலான விண்வெளிப் பயணங்களை உணர்ந்து கொள்வதில் நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும். நாட்டு மக்களுடன் இணைந்து நானும் இந்த அசாதாரண சாதனையை பாராட்டுகிறேன். மனித குலத்தின் நலனுக்காக அறிவியலின் புதிய எல்லைகளை தொடர்வோம்" என்று தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com