

புதுடெல்லி,
சவுதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனங்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன. இதைப்போல பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்துக்குள் ஆளில்லா விமானங்கள் மூலம் பயங்கரவாதிகள் ஆயுதங்களை போடுவதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த சம்பவங்களை தொடர்ந்து ஆளில்லா விமானங்கள் குறித்து இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை அடைந்து உள்ளன. எனவே நாடு முழுவதும் உள்ள ஆளில்லா விமானங்கள் குறித்து கருத்தில் கொள்ளப்பட்டு உள்ளன. இதில் நாடு முழுவதும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட முறைப்படுத்தப்படாத ஆளில்லா விமானங்கள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. சிறிய ரக விமானங்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானங்கள் என அவை வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த விமானங்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளையக்கூடும் என்பதால், அவற்றை சமாளிக்கக்கூடிய ஆயுதங்கள் வாங்குவது குறித்து பாதுகாப்பு நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன. குறிப்பாக ஆளில்லா விமான எதிர்ப்பு துப்பாக்கி, விமானம் கைப்பற்றும் கருவி என பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.